இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைக்க முனையும் ஆய்வாளர்கள், தங்களது வரலாற்றுப் பயணத்தை ஈழத்துப் பூதந்தேவனாரில் தொடங்குவதைப் பொதுமரபாகக் கொண்டுள்ளனர்
பெயர் மயக்கமும் பெயர் மரபுகளும்
சங்க இலக்கிய நூல்களில் இப்புலவர் ஒரே பெயரால் குறிப்பிடப்படவில்லை; மாறாக நான்கு விதமான பெயர் மரபுகளில் சுட்டப்படுகிறார்:
ஈழத்துப் பூதந்தேவன் (குறுந்தொகை 343, அகநானூறு 88)
ஈழத்துப் பூதந்தேவனார் (நற்றிணை 366)
மதுரை ஈழத்துப் பூதந்தேவன் (குறுந்தொகை 189, 360)
மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் (அகநானூறு 231, 307)
இப்பாடல்களில் ஈழம் பற்றிய நேரடிப் குறிப்புகளோ அல்லது தொகுத்தவர்கள் இவரை ஈழத்தவர் என வெளிப்படையாக அடையாளப்படுத்திய சான்றுகளோ இல்லை
ஆரம்ப கால நிலைப்பாடு
தமிழ்ப் புலவர் சரிதத்தை முதன்முதலில் தந்த (1859) சைமன் காசிச்செட்டியும், அதனைத் தொடர்ந்து 'பாவலர் சரித்திர தீபகம்' தந்த (1886) ஆ.சதாசிவம்பிள்ளையும் பூதந்தேவனாரைத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவராகச் சுட்டவில்லை
வித்துவ சிரோமணி சி.கணேசையரின் கருத்து
பூதந்தேவனாரை ஈழத்துப் புலவராக முதன்முதலில் வெளிப்படையாக அடையாளப்படுத்தியவர் புன்னாலைக் கட்டுவன் வித்துவ சிரோமணி சி.கணேசையர் ஆவார்
சி.கணேசையரின் குறிப்புகளின்படி:
இவர் மதுரையில் வந்து தங்கிய ஈழத்துப் பூதனது மகன் தேவன் எனப்படுவார்
. ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு போய் மதுரைச் சங்கத்தில் புலவராய் நிலவினார்; தன் தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை வந்து கற்றுப் புலவரானார் என்றும் கருத இடமுண்டு.
எனினும், பூதந்தேவனார் ஈழ நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கோ, தமிழ்நாடு சென்று கல்வி கற்றுப் புலவரானார் என்பதற்கோ கணேசையர் எந்தவொரு நேரடிச் சான்றினையும் முன்னிறுத்தவில்லை; பெயரின் முன்னொட்டை அடிப்படையாகக் கொண்ட ஊகமாகவே இது அமைந்தது
.
மாறுபட்ட கருத்துக்களும் ஐயங்களும்
1. க.செ.நடராசாவின் வாதம்
பிற்காலத்தில் வந்த க.செ.நடராசா, பூதந்தேவனாரை ஈழத்தவராகக் கொள்வதில் தயக்கம் காட்டியதோடு, அவரை கேரளப் பிரதேசத்திற்குரியவராக அடையாளப்படுத்த முயன்றார்
2. பொ.பூலோகசிங்கத்தின் நிலைப்பாடு
ஈழத்து இலக்கிய வரலாற்றைக் கட்டமைக்க முயன்ற பூலோகசிங்கமும் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்பதில் தயக்கம் காட்டினார்
ஆய்வுகளும் மறுப்புக்களும் (ஆ.வேலுப்பிள்ளையின் வாதங்கள்)
நடராசா மற்றும் பூலோகசிங்கம் எழுப்பிய ஐயங்களுக்கும் வாதங்களுக்கும் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை தகுந்த சான்றுகளுடன் மறுப்புக்களை முன்வைத்தார்:
கேரள வாதம் மறுப்பு: இலங்கைக்கு வெளியில் ஊரோ நாடோ ஈழம் என வழங்கப்பட்டு வந்ததற்கு இதுவரை எந்தச் சான்றும் கிடைக்கவில்லை
. கேரளத்தில் உள்ள ஈழவர் மக்கள் இலங்கை போன்ற பெரிய தீவிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் எனக் கூற தகுந்த சான்றுகள் உள்ளதே தவிர, கேரளத்தின் ஒரு பகுதி 'ஈழம்' என அழைக்கப்பட்டதற்கு ஆதாரமில்லை . ஒரே புலவர் என்ற நிரூபணம்: இருவரையும் வெவ்வேறு நபர்களாகக் கொள்ள முடியாது என்பதற்கு அகச்சான்றுகள் கைக்கொடுக்கின்றன
. யானையும் புலியும் மோதும் கோரக் காட்சி சங்கப் புலவர்களுக்குப் பயங்கர அனுபவமாக இருந்ததுடன், 'புலி கொன்ற யானை' என்ற தொடரும் பிரபலமாக விளங்கியது . ஈழத்துப் பூதந்தேவனாரின் பாடல்களிலும் மதுரை ஈழத்துப் பூதந்தேவனார் பாடிய அகநானூற்றுப் பாடலிலும் (307) இக்காட்சியமைப்பு ஒத்த தன்மையில் வருவதால், இவ்விரு பெயர்களுக்கு உரியவரும் ஒருவரே என்பதை உறுதிப்படுத்த முடிகிறது . இலக்கியச் சான்றுகள்: பண்டுதொட்டே 'ஈழம்' என்னும் பெயர் இலங்கையையே குறித்துவந்தமைக்கு இலக்கிய, இலக்கண, சாசனச் சான்றுகள் உண்டு என ஆ.வேலுப்பிள்ளை அறிவியல் பூர்வமாக நிறுவினார்
.
சங்க இலக்கியப் பங்களிப்பும் பாடல் சிறப்புகளும்
பூதந்தேவனார் பாலையும் குறிஞ்சியையும் செம்மையாகப் பாடியுள்ளார். இவருது பாடல்கள் காட்டும் வாழ்வியல் மற்றும் இயற்கைச் சூழல் சித்தரிப்புகள் தனித்துவமானவை:
நற்றிணை (366 - பாலைத் திணை): உலகியல் வழக்கப்படி பொருள் தேடச் செல்லும் தலைவன், தனது நெஞ்சோடு பேசிக்கொள்வதாக அமையும் பாடல் இது. வடபுல வாடைக்காற்று வீசும் குளிர்காலத்தில் தன் தலைவி கூந்தலைக் கழுவி உலர்த்தி முல்லைப்பூ சூடி இருப்பாள் என்று எண்ணிங்குவான். அங்கு குருவியும் கரும்புப் பூவைக் கொய்து தன் கூட்டில் மெத்தையாக வைத்துக்கொள்வதைக் குறிப்பால் உணர்த்துவார்.
அகநானூறு (88 - குறிஞ்சித் திணை): காட்டு விலங்குகள் திரியும் வழியில், கானவன் கண்ணில் படாமல் தலைவன் அரும்பாடு பட்டு வருதலைத் தோழி தலைவிக்கு உரைப்பாள். புலியைக் கொன்ற யானை மதம் பெருகக் குரல் எழுப்ப, அதனை யாழிசை என எண்ணி மலைப்பாறை வெடிப்பில் வாழும் அசுணம் என்னும் விலங்கு கேட்டு இன்புறும் காட்சியும், கரடி (உளியம்) புற்றைக் கிண்டி உண்ணும் சுவடும் இதில் அழகாகப் பேசப்படுகிறது.
அகநானூறு (231 - பாலைத் திணை): பொருள் தேடுவதன் நோக்கத்தை இப்புலவர் தெளிவுபடுத்துகிறார். பகைவரின் கொட்டத்தை அடக்கவும், உறவினரின் துன்பத்தைப் போக்கவும் ('செறுவோர் செம்மல் வாட்டவும், சேர்ந்தோர்க்கு உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்') பொருள் உதவும் என்ற உயரிய நோக்கத்தை விளக்குகிறார்.
அகநானூறு (307 - பாலைத் திணை): வேங்கைப் புலியை வென்ற யானை மற்றும் கறையான் புற்றைக் கிண்டும் கரடி வாழும் கடினமான வழியில் பொருள் தேடச் செல்வது குறித்துத் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாகும்.
குறுந்தொகை (189): நாளை பொருள் தேடிவரச் செல்ல உள்ளதால், இன்றே தலைவியைத் தழுவி வந்துவிடுவதாகத் தலைவன் தன் பாங்கனிடம் கூறுவதைக் குறிக்கிறது. இதில் 'விசும்பு வீழ் கொள்ளி' (எரிமீன்) பற்றிய வானியல் செய்தியும் இடம்பெற்றுள்ளது.
குறுந்தொகை (343 - பாலைத் திணை): ஆண்யானை பாய்ந்ததனால் அயர்ந்து கிடக்கும் ஆண்புலியையும், வெண்ணிறக் கிளைகளை உடைய வேங்கை மரத்தின் பூக்களையும் உவமைப்படுத்தித் தோழி உடன்போக்குக்குத் தலைவியை ஊக்குவாள்.
குறுந்தொகை (360 - குறிஞ்சித் திணை): தலைவனின் பிரிவால் தலைவி ஏங்குவதை வெறியாட்டு எடுக்க முயலும் தாயிடம், கொடிச்சியர் கையில் குளிரை (தினைக்கதிர் காக்கும் கருவி) எடுத்துக்கொண்டு கிளி ஓட்டச் செல்வது போலத் தாமும் செல்லலாம் என்று தோழி ஆறுதல் கூறுவாள்.
மேற்கூறிய அனைத்து ஆய்வுகளும் விவாதங்களும் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்பதில் ஆரம்பத்தில் இருந்த ஐயங்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளன
- கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days